பூமிக்குள் இல்லை புதையல் !
வெற்றுப் பொழுதை வரவாக்கி- வாழ்வை
விழலுக் கிறைத்த நீராக்கி- வெறும்
கற்றைக் காகிதக் கனவுகளில்-நீ
காலம் முழுதும் கழிப்பதுமேன்?
மூலையில் கிடந்து தவமிருந்தாய்- நீ
முகாரி பாடியே ஓய்ந்திருந்தாய்- புலர்
காலைப் பொழுது உனக்கில்லையா? உன்
கண்ணைத் திறக்க வழியில்லையா?
எத்தனைக் கனவினில் குடியிருந்தாய்- அதில்
எத்தனை மாளிகை கட்டுகிறாய்-உன்னில்
மெத்தன மேகம் மிதந்ததனால்- உன்
மனத்தின் ஆழம் தெரியவில்லை.
நீயே உனக்கு எதிராகி- உன்
நிழலே கூடப் பகையாகி-தினம்
தீயாய்க் கவலை பெரிதாகி-உன்னைத்
தின்னும் படிக்கு விடலாமா?
இமைகளைக் கொஞ்சம் உயர்த்திப்பார்-உன்
எதிரே இமயம் தெரிகிறதா? நெஞ்சச்
சுமைகளை எண்ணிக் கலங்காதே-வாழ்வில்
சோதனை இன்றிச் சுகமேது?
நெற்றி மேட்டின் முகவரிதான்- உன்னில்
நீளும் முயற்சி முத்திரைகள்-புகழ்
வெற்றிக் கொடியை நாட்டிடவே- மண்ணில்
வீரப் பரணி பாடியெழு.
தாய்மண் உனக்கு அந்நியமா- உன்றன்
தமிழ்மொழி உனக்குப் பகைக்களமா?- போரில்
காயப் படாமல் வெற்றியினை- இங்குக்
காண்பதும் என்ன சாத்தியமா?
கடமை என்பது கடலலளவு- அதில்நீ
கடந்து வந்தது காலளவு - உண்மை,
உடைமை என்பது உள்ளளவு-மனிதம்
உயர்ந்திட அன்புதான் கொள்ளளவு.
தோள்கள் தாங்கும் கைகளினால்- பெருந்
தடைக்கல் பாறையைப் புரட்டியெடு- வீர
வாளாம் கைவிரல் நீட்டியிங்கு- மண்ணில்
வலிமையை ஒன்றாய்த் திரட்டியெழு.
காற்றுக்குப் புதியதிசை காட்டிவிடு- வியர்வைக்
கடலில் மூழ்கி முத்தையெடு-சமூக
நாற்றுக்கு நன்னீர் ஊற்றிவிடு- நாளை
நலமாய் வாழவழி காட்டிவிடு
ஒளிப்பய ணந்தான் உன்பயணம்-உன்றன்
உழைப்பினைக் காட்ட இதுதருணம்- வாழ்வில்
நெளிந்தும் வளைந்தும் கொடுக்காமல்- நீ
நெஞ்சை நிமிர்த்துப் போராடு
வருந்த வேண்டாம் வாலிபனே- உன்
வாசலில் நம்பிக்கை வளரவிடு- உன்
மனத்தைத் திருத்தப் பயிற்சியெடு- பிறர்
வாழப் பொருளைப் பகிர்ந்துகொடு
மூளைத் தனமே மூலதனம்- அது
முடங்கிப் போனால் ஏதுதடம்? நல்ல
வேளை வருமென்று காத்திருந்தால்- அது
வெட்டிப் பொழுதாய்க் கழிந்துவிடும்.
மனத்தைத் தோண்டிப் புதையலெடு- நல்ல
மானிடம் போற்றும் புகழைப்பெறு- மனித
இனத்தை உயர்த்தப் பாடுபடு - அதற்கு
இன்றே உழைக்கப் பயிற்சியெடு.
பூமியில் இல்லை புதையலடா- மனப்
புன்னகை ஒன்றே விடியலடா- இங்கு
நாமும் வாழ்வ துண்மையடா- நாளும்
நல்லதை நினைத்து உயர்ந்திடடா!
உறவுகள் பூக்கும் வாழ்வில் -ஒன்றாய்
உணர்வுகள் மலர்ந்து சிரிக்கும்-இங்கு
நிறங்கள் பலவாய் இருந்தும்- மனித
நேயம் ஒருகொடி பூக்கும்
மண்ணில் மனித உறவுகள்- சாதி
மதங்களற்ற உணர்வுகள்-உயர்
விண்ணில் பறக்கும் பறவைகள்- அங்கு
வேற்றுமை தமக்குள் எண்ணுமோ.
ஒற்றுமை காணும் உள்ளமே- பண்பில்
ஓங்கும் இமயம் ஒக்குமே- நீரில்
பற்றிப் படரும் பாசிபோல்- இங்கு
மானுடம் அழுக்காய்ப் போவதோ?
கத்து கடலடி தன்னில்- சிப்பி
கலங்கா திருந்து ஈன்றிடும்-நல்ல
முத்துச் சிப்பியாய் ஒளிர்ந்திட-வாழ்வில்
முந்தும் முயற்சிகள் வேண்டாமா?
நள்ளிர வினில்வந்த சுதந்திரம்- இன்று
நச்சுப் பொய்கையாய்ப் போவதோ?- நம்
உள்ளெழும் சக்தியை ஒன்றாக்கி- பாரத
ஒற்றுமை காண வேண்டாமா?
சொந்த நாட்டின் துயர்தீர- நம்மைச்
சோதித் துணர்ந்து துயர்துடைப்போம்- மனித
மந்தைக் கூட்டம் திருந்தாமல்- நமக்கு
மானிடம் என்பது பொருந்துவதா?
விட்டில் வாழ்க்கை வாழுதற்கே- மண்ணில்
வீணர்கள் விதைத்த கொள்கைதனை-நாம்
எட்டி எறிந்து பொசுக்கிவிட்டு- புரட்சி
எண்ணம் ஓங்க வழிசெய்வோம்