தவிப்பு
நாடுகின்ற நினைவெல்லாம் எனது நெஞ்சம்
நனைகின்ற மழைக்காலம் எண்ணி எண்ணி
வாடுகின்ற நிலையினுக்கு ஆனேன் நானும்
வாட்டமிலா முகத்தினளாய் நீயோ அங்கே
தேடுகின்ற கவியின்பம் நூலில் தேடித்
திகைக்கின்றேன் கணப்போதும் கிடைப்பதில்லை
பாடுகின்ற பாட்டெல்லாம் நீயே யன்றிப்
படுகின்ற துயரெல்லாம் அறிய மாட்டாய்
ஏந்திழையே என்னுயிரே இப்போ தெல்லாம்
என்நெஞ்சம் உணர்வதெல்லாம் பிரிவுப் பாட்டே
வந்திங்குப் படித்தாலும் முடிவ தில்லை
வாட்டிநிற்கும் காட்சியிலே இதுவும் காணாய்
செந்தமிழன் தன்மொழியில் கற்ப தற்குச்
சிலகூட்டம் தடையாக இருத்தல் போலே
சொந்தமாக நீயிருந்தும் பழகு தற்குச்
சுவராகத் தடைக்கல்லாய் யார மைந்தார்?
ஏக்கத்துப் பெருமூச்சு என்னைச் சுட்ட
இதயத்தின் அடுக்களைதான் காண்பாய் நீயும்,
நோக்கணங்கே நோகாதே கேட்பாய் சற்றே
நொடிப்போதும் படிப்பினிலே கவனம் செல்லா(து)
ஆக்கத்தில் கொண்டுவந்த பொருள்கள்
யாவும்
அலைகடலில் நடுவினிலே அழிய விட்டுத்
தேக்கத்தில் இருக்கின்றேன் அறிவாய்;
இன்னும்
தெளிவாக உணர்த்தநானோ கவிஞ னில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக