யதார்த்தத்தில் இழையோடும் கவிதைகள்
(விமர்சனம்)
கவிதை என்பது புனைதல் அன்று; அது ஓர் அனுபவம். போகிற போக்கில் சட்டையைப் பிடித்திழுத்துச்
சட்டென்று திரும்பிப் பார்க்கச் செய்யும் வியப்பு. அந்த வியப்புனூடே பயணிக்கும்போது
விரியும் பார்வை ஒரு "க்ளைடாஸ்கோப்" அனுபவம்.
சுருக்கமாகவும் சுருக்கென்று மனத்தைத்
தைக்கும்படியான அப்படிப்பட்ட கவிதை, ஹைகூ என்று இறக்குமதியாகி ஆண்டுகள் பல
கடந்தாலும் தமிழில் இன்னும் அதற்கு மவுசு கூடிக் கொண்டுதான் இருக்கின்றது..
ஹைகு மேலைநாட்டுப் பதியன்; தமிழ் நாட்டுக்குத் தக்கவாறு அதனை
வைத்து ஒட்டுச் செடி வளர்க்கும் வித்தை வியப்புக்குரியதாய் வளர்ந்து விட்டிருக்கிறது. விவேகம் உள்ளவர்கள்
அதில் வித்தகம் புரிகிறார்கள். விபரம் தெரியாதவர்கள் எழுதிக் குவிக்கிறார்கள்.
குவியலிலும் நல்ல ஹைகு கிடைக்காமல் போவதில்லை.
சுருங்க உரைத்தலே பாரதிக்குப் பிடிக்காது என்றாலும், ஆத்திசூடி போன்றவற்றைப் புதியன
விரும்பு என்பதற்கான கருத்துகளைச் சொல்லவே, அவரும் ஆத்திசூடி போன்ற வாமன உருவ
வடிவத்தை எடுத்துக் கொண்டார். அவருக்கு ஹைகு
அறிமுகமாகி இருந்த போதிலும்,
அதில் நாட்டமில்லாமல் போனது. கவிதை
என்பது ஒரே அடியாகச் சுருங்கிப் போய்விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்துள்ளார்.
கவிதையின் இன்றைய நிலைமையே வேறு.
சுருங்கச்சொல்லி விளங்க வைக்கும் வெளிச்சத்திற்குத் தன்னைத் திசை மாற்றிக்கொண்டிருக்கிறது இன்றைய
கவிதை.
தமிழ் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளும்.
துளிப்பா, தன்
வடிவ எல்லை தாண்டிக் கருத்து மின்னலை உள்வாங்கிக் கொண்டு கவிதை உலகை எட்டிப்பார்த்த
வண்ணம் உள்ளது.
இந்த விதத்தில் துளிக்கவிதையோடு தூரிகை
வண்ணத்தையும் சேர்த்துக் குழைத்துத் தந்திருக்கிறார் திரைப்படத் துறை சார்ந்த லிங்குசாமி. இவர் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், ஓவியர், கவிஞர். லிங்கூ என்ற பெயரில்
வெளியிட்டிற்கும் இந்தக் கவிதைத் தொகுதி அவருடைய பெயருக் கேற்றவாறு ஓர் இலக்கிய வகையாக(GENRE) உருவாவதற்கான வரவேற்பு
வாசலைத் திறந்துவிட்டிருக்கிறார்.
இந்தத் தொகுதியில் பெரும்பாலான கவிதைகள் ஹைகு
இல்லை யென்றாலும், ஹைகுவிற்கான வித்தினை அள்ளித்
தெளித்திருப்பதைப் பார்க்கலாம். ஹைகு வடிவத்தைப் பற்றி இங்குக் கதைக்காமல், ஹைகூ உணர்வினை விதைப்பதாய் உள்ளவற்றை
வெளிப்படுத்துவதுதான் உண்மைக்கு மாறுபடாமல் இருக்கும். இந்த விதத்தில்
துளிக்கவிதையோடு தூரிகை வண்ணத்தையும் சேர்த்துக் குழைத்துத் தந்திருக்கிறார் லிங்குசாமி.
இதில் இடம்பெற்றுள்ள பல கவிதைகள் சட்டென்று
வீசும் தென்றலாய் மனத்தை வருடிவிட்டுச் செல்வன; சில
கவிதைகள் கருத்துகளால் ஆன பாதரசத்தின் அடர்த்தி; சில காட்சிக் கவிதைகள் நேர்த்தியான
கவிநெசவு. சில கவிதைகள் சுபாவனுபவத்தின் சுவடுகள்.
அன்றாட வாழ்வில் காணும் யதார்த்தமான காட்சிகள்
வெறும் சொல் விளையாட்டாக ஆகிவிடாமல், கச்சிதமான வார்த்தைகளால் கவிதையின்
கணபரிமாணத்தைக் கவிதையில் கொண்டுவந்திருப்பது அவரது கவிதையின் வெற்றிக்கான விடியல். அவரது ஒவ்வொரு
கவிதையையும் கம்பியில் தொங்கிக்கொண்டிருக்கும் மழைத்துளியை இரசிப்பது போல
ரசிக்கலாம்.
சில ஹைகுகளில்
தீர்க்கமான பார்வை தெரிகிறது. உதாரணமாக,
மொட்டைப் பனைமரத்தில்
தோகை விரித்தபடி
மயில்.
இது அசலான ஹைகுவிற்குரிய அடையாளம்.
மயில் மொட்டை பனைமரத்தில் இருக்குமா? இது வெறும் காட்சியா? இங்கு
வெறும் அழகியல் மட்டுமா
வெளிப்பட்டிருக்கிறது? இந்தக் கவிதைக்கு இன்னொரு முகம் இல்லையா? இது காட்சிப் படிமமாகத்
தோன்றவில்லையா? பனையோலை இருக்க வேண்டிய இடத்தில் மயில்
தோகை விரித்தபடி இருக்கிறது. மொட்டையாக இருக்கும் ஒன்று அழகு படுத்தப்படுகிறது.
பனையோலை விரிந்திருக்க வேண்டிய மயிலின் தோகை அதனை நிறைவு செய்து அழகூட்ட வில்லையா? வெற்றிடத்தை அழகுணர்ச்சி நிறைவு
செய்கிறது. மொட்டைமரம் வறட்சியின் அறிகுறி. தோகைமயில் மலர்ச்சியின் அறிகுறி.
மலர்ச்சியால் வறட்சியை நிறைவு செய்யலாம். இல்லாத ஒன்றில் இருப்பதன் தேவை நிறைவு
செய்யப் படலாம். இப்படி மொட்டைமரமும், தோகை
மயில் இரண்டையும் இன்னும் பல பல அர்த்த அடுக்குகளாக உணர்ந்துகொள்ள முடியும்.
வாழ்க்கை எப்போதுமே முரணானதுதான்.முரணாவதில்தான்
வாழ்க்கையின் வெற்றியே இருக்கிறது; இனிக்கிறது. ஆண்xபெண்; பகல்xஇரவு: வெப்பம்xகுளிர்ச்சி; இப்படி வாழ்க்கை அழகிய முரணில்தான்
இயங்கிக் கொண்டு இருக்கிறது. இலக்கியத்தில் முரணும் ஓர் உத்தியாகிக் கவிதைக்கு
அழகூட்டுகிறது. லிங்குசாமியும் சில கவிதைகளை அழகிய முரணில் தருகிறார்.
எப்போதும் குடையோடு செல்லும்
தாத்தாவின் இறுதி ஊர்வலத்தில்
நல்ல மழை - இது காட்சி முரண்.
ஆசையாய் வாங்கினேன்
புத்தர் சிலை இது கருத்து முரண்
நீ யாரையோ
திட்டிக்கொண்டிருக்கிறாய்
அவன் சிரித்துக்கொண்டிருக்கிறான்
இது நிகழ்ச்சி முரண்
பூச்சி மருந்தில் பூச்சி
உயிரோடு
இது இயற்கை முரண்
இப்படி முரணுக்குள் நம்மை மோகிக்கச் செய்யும்
கவிதைகள் பல.
இதில்
வரும் காதல் கவிதைகள் தனி ரகம். இயல்பான காட்சிகளில் இழைகிறது காதல்
தவிப்பு. காதலில் காத்திருப்பதும் காதலுக்கான ஏக்கப் பார்வையும் ஒரு காவிய
ரசனையாய்ப் பெருக்கெடுப்பன. அந்த வகையில் எதிர்பார்ப்பும் ஏக்கமும் சில கவிதையில்
எளிதாகப் படம் பிடித்துக் காட்டப் பட்டுள்ளன. காதலில் முதற்பார்வை வியப்பளிப்பது; அது ஒரு மின்னல் வெட்டுப்போல! நிழலை
அசைபோடும் நினைவுகளாகத் தொடர்வது.
ஒரு கவிஞன் எழுதினான் சுருக்கமாக! நெஞ்சில்
சுருக்கெனத் தைக்கும் வகையில்...
மின்சாரத்தைத் தொட்டால்தான் 'ஷாக்',
மீராவைப் பார்த்தாலே 'ஷாக்'.
இது லிங்குசாமி பார்வையில் ஒரு பஞ்ச் டயலாக்
ஆகலாம். இவர் எழுதுகிறார்.
இரண்டு விஷயங்கள் மட்டும்
அப்படியே மனதில் நிற்கிறது
முதன்முதலில் கடல் பார்த்தது
கவிதாவைப் பார்த்தது
காதலின் பார்வையில் ஆழம், அகலம், நீளம் ஆகியவற்றை உணர்த்தவோ என்னவோ அவருக்குக் கவிதாவையும், கடலையும் இணைத்துப்பார்க்கத்
தோன்றியிருக்கிறது. கடலன்ன காமம் என்றார் திருவள்ளுவர். சேக்ஸ்பியர்
sea of love and lust என்றார். காதல் யாரிடத்தும் அனுமதி கேட்டுக் கொண்டு நெஞ்சில் புகுவதில்லை. உயர்திணை செய்யும் காதலை அஃறிணை கூடப் பேசும். அது தனி உலகம்.
காதலில் துப்பட்டா கூடப் பேசுகிறது. எப்படி?
அந்த
அடுக்குமாடிக் குடியிருப்பில்
நீ எந்த வீட்டில் இருக்கிறாய் என்பதைக்
கூப்பிட்டுச் சொன்னது
உன் கத்திரிப் பூ துப்பட்டா
என்பதில் காற்றில் அசையும் துப்பட்டா
ஒருபுறமும் காதலில் அலையும் மனமும் ஒருங்கே ஓரங்கட்டப்படாமல் பார்வையை அஃறிணைப்
பொருளில் வைத்துக் காண்பித்திருப்பது யதார்த்தத்தின் இழை.
இப்படிக் காதல் கவிதைகளில் வகுப்பறைத் தண்டனை, கோயில், திருவிழா, பால்கனி, பூக்கள், படித்துறை, இடி, மின்னல் போன்ற காட்சிகளில் காதலை அதுவும் கைக்கிளைக்
காதலாகப் பல கவிதைகளில் காட்டியிருப்பது
கவி எழுத வரும் இளைஞர் மத்தியில் ஒரு கவன ஈர்ப்பு.
மனித நேய மிக்க அக்கறையை, இதில் இடம்பெறும் சில கவிதைகள் பதிவு
செய்துள்ளன.
இஸ்திரி போடும் தொழிலாளியின்
வயிற்றில் சுருக்கம்
மடிப்புக் களையாமல் சலவை செய்யும் தொழிலாளியின்
அடிவயிற்றில் வறுமையின் சுருக்கக் கோடு, கவிஞரின்
பரிவுப் பார்வையால் பக்குவமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது அழகிய முரண்.
இக்கவிதையைப் படிக்கும்போது தாரா பாரதி எழுதிய கவிதை வரிகள் நினைவு வருகின்றன.
முதுகில் சுமக்கும் தானிய மணிகள்
வயிற்றுப் பக்கம் வருவதே இல்லை
என்ற மரபுசார் கவிதை, மூட்டைத் தூக்கும் தொழிலாளியின்
அடிவயிற்றுப் பிர்ச்சனையைக் காட்டும்.
யாரோ தெரியவில்லை
அந்த இரவு நேரப் பேருந்தின்
கடைசி இருக்கையிலிருந்து
தொடர்ந்து
விசும்பல் சத்தம்
வந்துகொண்டே இருந்தது
என்ற கவிதை ஒரு நிகழ்ச்சியைப் பூடகமான
செய்தியால் உணர்த்துகிறது. மனித நேயப் பார்வை இக்கவிதையில் இருப்பினும், சொல்லப்பட்டிருக்கும் சூழல்
ஊகப்படுத்தி உணரத்தக்கதாய் உள்ளது.
போகிற போக்கில் மனத்தில் சலனத்தை ஏற்படுத்திச்
செல்வது ஹைகுவின் தனித்தன்மை. அத்தன்மையின் சாயலில் பல கவிதைகள் துளிப்பாக்களாக
வெளிப்பட்டுள்ளன.
வயல் முழுக்க வண்ணத்துப் பூச்சிகள்
என்ன செய்ய
களைபறிக்க வேண்டும்
ஹைகு பார்வையில் இரக்கத்திற்குத் தனியிடம் உண்டு
என்பதை ஜப்பானிய ஹைகுகளில் காணலாம். இதனை ஒத்த கவிதைகள் இந்தச்சாயலில் பல
வந்துள்ளன.
ஹைகுவிலிருந்து கிளைத்த இன்னொரு வடிவம் ஹைஃபூன்
என்பது. இந்த வடிவம் ஹைகுவைப் போல இறுக்கமானதும் செறிவுடனும் இருக்கவேண்டும்
என்பதில்லை. ஆனால் நகைச்சுவை, எள்ளல்
போன்றவை இலகுவான காட்சிகளில் வெளிப்படுத்தப்பெறும். இத்தொகுயில் இவ்வாறான கவிதைகளும் இடம்
பெற்றிருக்கின்றன. சான்றுக்குச் சில ;
தேவை இல்லாமல்
/குழப்பம் விளைவிக்கிறாய் /எல்லாத் ,திருமண
வீடுகளிலும்
ஒரு சிங்கத்தைக்
/காதலிருந்தால் கூட இந்நேரம் /சொல்லியிருப்பேன்
தொடர்ந்து
/உன்பின்னால் வரும்பொழுது /கெட்ட வார்த்தையில் திட்டுகிறாய் /உனக்குத்தான் /அது
கெட்ட வார்த்தை
நல்ல வேளை / நீ
ஹெல்மெட் அணிந்துவந்தாய் /விபத்து தவிர்க்கப்பட்டது
அசோகர் போதி
மரங்களை நட்டார் /அதில் ஒன்று கூட போதி
மரமில்லையா?
என்னிடம்
கேட்காமல் கடந்து செல்கிறான் /பிச்சைக்காரன்
ஆண்தெய்வங்கள்
வைத்திருக்கும் /அத்தனை ஆயுதங்களையும் /ஒருசேர வைத்திருக்கிறாள் காளி
இப்போதெல்லாம்
/ரிங்கோடனில் மட்டுமே /கேட்க முடிகிறது /குருவிகளின் சத்தம்
இவற்றில் பல வகை உணர்வுகள் எடுத்துச்
சொல்லப்பட்டிருப்பினும் அவை பல கோணங்களில் சிறப்புற அமைந்துள்ளன.
சில ஞாபகங்கள் மனத்தை அசை போட வைக்கும்.
அவையும் கூடக் கவிதையில் நினைவுக் காட்சியின் சாட்சியங்களாய்க் கவிதையில்
முளைவிடும்.
தூரத்தில் யாரோ இருமும் சத்தம்
இறந்து போன அப்பாவை ஞாபகப்
படுத்துகிறது.
இது ஒருவகையில் 'நாஸ்டால்ஜிக்'
மனோபாவம். சிக்மண்ட் ஃபிராய்டு
மொழியில் சொல்வதென்றால் 'அஸ்ஸிமிலேஷன் ஆஃப் டெத்'. இறந்தவர்களைப் பற்றிய எண்ணங்கள், அவர் இறந்த சில காலங்களில் மனத்தை விட்டு
அகல்வதில்லை என்ற மன வெளிப்பாட்டின் உளவியல் நுட்பம். இதனை உள்வாங்கிய கவிதையாக இக்கவிதை உள்ளது. இக்கவிதையில் ஒரு வித்தியாசமான
பார்வை அதி அற்புதமாக வந்திருக்கிறது.
அரிசியைச்,
சுமந்து வரும் எறும்பு
சிரிக்கிற மாதிரியே
தெரிகிறது
இது உணர்த்தும் செய்தி ஒருபுறம் இருப்பினும் இப்பார்வை ஒரு வியத்தகு
பார்வை.
பற்களின் வெண்மை, அரிசியின் வெண்மையில் வைத்துச்
சொல்லப்பட்டிருக்கும் விதம் அருமை. எறும்புகள் அரிசையை வரிசையாய்க்
கொண்டுசெல்லும் ஒழுங்கும், அது செல்லும் அழகில் சிரிப்பைக் காண்பதும்
பார்வை நுட்பத்தின் உச்சம்.
இக்கவிதை நூல் கருத்திற்கும், காட்சிக்குமான விருந்து. இளைஞர்கள்
பட்டாளம் விரும்பி ஏற்கும் வகையில் அல்லாமல் அவர்களை எழுதத் தூண்டும் அளவிற்கு
இந்தக் கவிதைத்தொகுதியின் கவி வடிவம் அமைந்துள்ளது. இந்த வடிவத்தை உயர்வு
நவிற்சியில் சொல்வதென்றால் லிங்கூ கவிதை வடிவம் ஓரு இலக்கிய வகையாகக் கருதலாமா
என்று எண்ணத் தோன்றுகிறது.
லிங்கூ என்ற இத்தொகுதி, லிங்குசாமியை கலைஇலக்கியத்தில்.
தூரிகையின் தோழனாகவும், கவிதையின் காதலனாகவும், அழகின் ரசிகனாவும் காட்டுகிறது.
ink makes a man to think
Lingoo makes young to write epigrams.
என்று சொல்லலாம் போலத் தோன்றுகிறது.