வியாழன், 11 ஜூலை, 2013

மாறுதடம்- சிறுகதை

மாறுதடம்
__________________________________________________________________
இராம.குருநாதன்
சிவராமன் படுத்த படுக்கையாய்க் கிடந்தார்.
மெல்ல மெல்லக் கண்களைத் திறந்து பார்ப்பதும், பின் இறுக்கமாய் மூடிக்கொள்வதும் அவரது வழக்கமாய்விட்டது. மூச்சு மட்டுமே சுதந்தரக்காற்றாக வருவதும், போவதுமாக ஊசலாடிக் கொண்டிருந்தது. வயது எண்பத்தொன்றைத் தாண்டியது. ஒற்றை நாடி சரீரம். நெட்டையான உயரம். இப்போது உடம்பு குறுகிப்போயிருந்தது. கண்களில் முன்பிருந்த ஒளி மங்கி மறைந்து விழிப்படல அழுத்தத்தால் சரியாகப் படிக்கமுடியாத  நிலை. வயது முயற்சியால் முகத்திலும், கைகளிலும் வரிவரியான கோடுகள்.
கிழிந்த நாராகப் படுத்துக்கிடந்தார் சிவராமன். முன் அறையில் இருந்த கட்டில் அருகே திறந்திருந்த சன்னலில் ஊடுருவிய சூரியத் திட்டுகள் சுவரில் வளையங்களாக ஒளிக்கோலங்களிட்டு மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருந்தன. அவை மறைய மறைய அவரது நினைவுகள் மட்டும் வளைய வந்துகொண்டிருந்தன.
சில நினைவுகள்... சில பிர்ச்சனைகள்... சில கனவுகள்...
இந்த இளவேனில் காலத்தின் வெம்மை அவரை வாட்டி வதைத்துக்கொண்டிருந்தது.
சிவராமன் சிறுவனாக இருந்தபோது அவருடைய தந்தை மார்க்கபந்து சொல்லிச் சொல்லி உருவேற்றியிருந்த தாயுமானவர் பாடல்கள், வள்ளலாரின் அருட்பா, பாரதியார் கவிதைகள் அவரது உள்ளத்தில் கலந்திருந்தன. அவற்றோடு கூட நாட்டுப்பற்றும் கலந்திருந்ததால், சிவராமனுக்குப் பாரதியின் பாஞ்சாலி சபதத்தின் மீது தனி அக்கறை. சோதியாயும், சுடரொளியாயும் பாஞ்சாலியாயும் பாரத அன்னை அவனது நெஞ்சில் கொலுவீற்றிருந்தாள்.
தமிழகத்திற்குக் காந்திஜி வந்திருந்தபோது சிவராமன் தன் சிறு வயதில் தந்தையின் தோளில் ஏறி மக்கள் வெள்ளத்தில் மிதந்து காந்தியைக் கண்ட காட்சியையும், பல்லாயிரக்கணக்கான மக்களோடு தானும் காந்தியைக் கையெடுத்து வணங்கியதையும் எண்ணிப் பார்த்தார். அப்போது சிவராமனுக்கு வயது ஐந்து. அந்த நாள் காட்சியை முதன்முதலாய்க் கண்ட அந்த விநாடியிலிருந்து இன்றைய நாட்டு நடப்புவரை பல நிகழ்ச்சிகள் அவர் நினைவிலிருந்து சங்கிலித் தொடர்களாக வந்து போயின. பல நிகழ்ச்சிகள் நினைவிலிருந்து தாண்டிச் சென்றன. அதுபோல் தன் வயதும் எண்பதைத் தாண்டிவிட்டதை உணர்ந்தார்.
பெருமூச்சோடு படுக்கைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த டம்ளரில் இருந்து கோதுமைக்கஞ்சியை எடுத்து ஒரு மடக்குக் குடித்தார். அது உப்புச் சப்பு இல்லாதிருந்தது. இப்போதிருக்கும் அவரது வாழ்க்கையைப் போல......  ஆனால், உப்புக்காக அன்று... வேதாரண்யத்தில் நடந்த உப்புச் சத்தியாகிரகத்தில் தந்தையோடு தானும் ஊர்வலமாகச் சென்றதை. எண்ணிக்கொண்டார். இளங்காளையாகத் தன் நாட்டுப்பற்றைக் காட்டிக்கொண்ட அவரது முதல் நிகழ்ச்சி அது. அவரது நெஞ்சில் நினைவுத்தழும்பாக நீங்காதிருந்தது அது.
பள்ளிமாணவனாக இருந்தபோது நடந்த  ஒரு நிகழ்ச்சி  அவரது நினைவலைகளில் மிதந்து வந்தது. ஆங்கிலேயர் ஒருவர் வரலாற்று ஆசிரியராக முதன்முதல் பள்ளியில் ஆசிரியராகப்பணியில் அமர்த்தபட்டார்.  ஆங்கிலப் பள்ளியை விட்டால் வேறு பள்ளிகள் இல்லாத காலம் அது. அங்கே எந்தக் காரணத்திற்காகவோ சக ஆசிரியர் ஒருவரைப் பார்த்து ''யூ பிளடி இண்டியன்'' என்று கடுமையாகப் பேசிவிட்டார் அந்த ஆங்கிலேய ஆசிரியர். சிவராமனுக்கு வந்ததே கோபம். அவர் கூறிய வார்த்தையைத் திரும்பப் பெற வகுப்பறையிலேயே உண்ணாவிரதம் இருந்தான். அந்த ஆங்கிலேயர் மன்னிப்புக் கேட்டுக்கொண்ட அடுத்த நாளிலிருந்து சிவராமன் பள்ளிக்கூடத்திற்குப் போய்வருவதனை வெறுத்தான். பள்ளிப் படிப்புக்கு முற்றுப் புள்ளி வைக்க நேர்ந்தது.
படிப்புப் பாதியில் நின்றதைப் பெரிதாக எண்ணவில்லை. அவர் தந்தை கூறியது இப்போதும் அவருக்கு நினைவிருக்கிறது. ''சிவா, படிப்பு என்ன படிப்பு? எழுதப் படிக்கத் தெரிஞ்சா போதாதா? நாட்டுக்காக எதையும் தியாகம் செய்யலாம். பள்ளிக்கூடம் போயி படிச்சாதான் படிப்பா? படிப்பறிவு வேண்டியதுதான்.அதெ பள்ளிக்கூடத்துல போய்தான் கத்துகணும்னு இல்லே. வீட்லேயிருந்து கத்துக்கலாம். படிப்புங்கறது வேறே! அறிவுங்கறது வேறே!! நம்ம பாஷையே போதும். அந்நிய பாஷை படிக்கத்தெரியலேன்னா குத்தமில்லே. தெரியாட்டி நாம ஒண்ணும் குறைஞ்சிடப்போறதில்லே. அவன் பாஷையைக் கத்துக்கிட்டு,'கிளார்க்கா' போயி அவனுக்குக் கால் பிடிக்கவா போறோம். அதை விடக் கேவலம் ஒண்ணுமில்லே. அவனுக்குக் கைகட்டி சேவகம் செய்யவா நாம பிறவி எடுத்தோம். பள்ளிக்கூடம் போகாட்டியும் பரவாயில்லே. வீட்டிலேயே இருந்து கத்துக்கலாம்.'' இப்படி அப்பா சொன்னதை'' வேறு பாஷைகள் கற்பாய், வீட்டுவார்த்தைகள் கற்கிலாய்'' என்று பாரதி பாடிய அடிகளை உச்சரித்தபடி தான் செய்தது சரியே என்று முடிவுக்கு வந்தவன் அவன். தீவிரமான தேசிய உணர்ச்சியைத் தன்னுள் ஏற்படுத்தியிருந்த தன் தந்தையின் சொற்களை இப்போது நினைவுக்குக் கொண்டு வந்ததும் கண்கள் பனித்தன.
தலைவர்கள் எரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது அதனை எதிர்த்துத் தமிழ் நாட்டிலிருந்து முதல் குரல் கொடுத்தவர் தன் தந்தைதான் என்பதை எண்ணிப்பார்த்துச் சிவராமன் பெருமிதப் பட்டார். அப்போது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அப்படிப்பட்ட தேசப்பற்றுள்ள ஒரு தந்தைக்கு மகனாக இருப்பதை எண்ணி எண்ணிப் பெருமைபட்டுக்கொள்வார். அவரைப் போன்ற ஒருவரை இப்போது பார்க்க முடியுமா என்று நினைத்தபோது ஆனந்தக் கண்ணீர் பெருகியது. தன் தந்தையின் பெருமைகளைப் பின்னாளில் தன் மகன் திலீபனுக்கும், மகள் கங்காவிற்கும் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்.
மார்க்கபந்து விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டு திருச்சிச் சிறையில் அடைக்கப்பட்ட நிகழ்ச்சியைச் சிவராமன் நினைத்துக் கொண்டார். அந்த நிகழ்ச்சி அவருள்ளத்தில் ஆழமாக வேரூன்றி இருந்தது. சிறைக்குச் சென்ற தந்தை உயிரோடு திரும்பிவரவில்லை. தந்தை இறந்த ஓராண்டிற்குள் தாயும் இறந்து போனாள். எல்லாம் பழங்கனவாகிப் போன நிகழ்ச்சிகள்.
மெல்ல மெல்ல நினைவலைகளில் இருந்து மீள முயன்றார். ஆனால் நினைவுத் தோரணங்கள் அவர் முன் அணிவகுத்து நின்றன. தொண்டையை அடைத்தது. இடையிடையே இருமல்... கனைத்துக்கொண்டார். தொண்டையிலிருந்து சளியை வெளியேற்ற முடியாமல் திணறினார். வெளியே சைக்கிள் மணியடித்துவிட்டு பேப்பரைப் போட்டுவிட்டுச் சென்றான் பேப்பர் போடும் பையன். எழுந்து பார்க்க இயலாத நிலையில் மீண்டும் தலையைச் சாய்த்து இடப்புறமாகத் திரும்பிப் படுத்துக்கொண்டார்.
தந்தை இறந்த பிறகு சிவராமன் பொது வாழ்க்கையில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவராகத்தான் இருந்தார். ஒருவழியாக ஆங்கிலேயன் இந்தியாவை விட்டு வெளியேறிய பிறகு விடுதலைக்கு முன்னும் பின்னுமான காலங்களை ஒப்பிட்டுப் பார்த்தார். நாடு விடுதலை பெற்ற சிலமாதங்களில் திருத்துறைப் பூண்டியில்  நிகழ்ந்த கூட்டத்தில் தம் நண்பர் சபாபதியைச் சந்திக்கநேர்ந்தது. அவரும் சிவராமனைப் போல விடுதலை உணர்வு மிக்கவர். அவருடைய மகள் பானுமதியை முறைப்படி திருமணம் செய்துகொண்டார். அவளோடு நடத்திய இல்லறவாழ்வு... அந்த வாழ்க்கைச் சுவடுகள்.......... நினைவுத் தோரணங்களாய் அவரது மனத்தில் பசுமையாய்ப் பதிவாகி இருந்ததை படுத்துக்கொண்டே நினைத்துப் பார்த்தார். '' பானு! தேசத்துக்கு நம்மாலான உதவியை  செய்யணுங்கிற உணர்ச்சி எத்தனை பேர்கிட்ட இருக்கு. சுதந்தரம் வந்த பிறகுதானே நமக்குப் பொறுப்பும் கடமை உணர்ச்சியும் அதிகமா இருக்கணும். அதெ யாருமே புரிஞ்சிகிடலே. நாடு பிரிஞ்சு பிளவுபட்டு.... தனித்தனித் தீவுகளா இருந்த மக்களை ஒன்னு திரட்டி நமக்குச் சுதந்தரம் வாங்கித் தந்த தலைவர்களைப் பத்தி யாருமே  புரிஞ்சுகிடலே.. தேசபக்தி தானா வரணும். என்னோட அப்பா ஒரு கவளம் சோறு ஊட்டும் போதே நாட்டுப் பற்றையும் சேர்த்து ஊட்டினாரு.. இப்ப நம்ம புள்ளங்களை வளர்க்கிறது  பெரிய பொறுப்பு, உங்கிட்டதான் இருக்கு அந்தப் பொறுப்பு. ஏன்னா, நான் ஊர் ஊரா போய்க் கூட்டங்களிலே பேசப் போயிடறேன். நீ தான் அவுங்கள நல்லா பாத்துக்கணும்'' என்று திருமணமான புதிதில் மனைவியிடம் சொன்னதை எண்ணிக்கொண்டார். ஆனால் அவளோ தன்னையும் பிள்ளைகளையும் தவிக்க விட்டுத் திருமணம் ஆன பத்தாண்டுகளில் பானுமதி  மறைந்து போனதை நினைத்ததும் விழிப்படலத்தை கண்ணீர் மறைத்தது.  
குடும்பத்தின் பொறுப்புச் சுமை ஒரு புறம் அலைக்கழித்தது. நாட்டு நடப்புகளும் அவரைப் பெரிதும் பாதிக்கத் தொடங்கியது. கூட்டங்களுக்குச் சென்று பேசுவதைச் சில ஆண்டுகளுக்கு முன் நிறுத்திக்கொண்டார். விடுதலை பெற்ற பிறகு காந்தியக் கனவுகள் சிதைந்து வருவதைக் கண்கூடாகப் பார்த்தபோது கண்கள் கலங்கின, அதனை நினைத்தபோது நெஞ்சு விம்மியது. சுதந்திரப் பயிர் வேரோடு பிடுங்கப்பட்டு வேறிடத்தில் நடுவது போன்ற பிரமையில் மூழ்கியிருந்த போதுதான்  பக்க வாதம் அவரை நிரந்தமான நோயாளியாக்கிப் படுக்கையில் கிடத்தியது. மக்களும், அரசியல் தலைவர்களும் காந்தியச் சிந்தனையிலிருந்து அந்நியப்பட்டுப் போய்விட்டார்களே என்று எண்ணியபோது மிகவும் வேதனைப்பட்டார். சில தேசியவாதிகள் சுதந்திரப்பயிரை மேயத் தொடங்கி விட்டதால், அதனை நினைத்தவுடன் நெஞ்சு விம்மியது. இருமல் தலைதூக்கியது. வறட்டு இருமல் தொடர்ந்தது. லொக்....லொக்.... லொக்  மூன்று முறை இருமியதும் வலதுபுறமாய்ச் சாய்வாகப் படுத்துக்கொண்டார்.
பாரத அன்னைக்காகத் தங்களைக் களப்பணியில் ஈடுபடுத்திக்கொண்டு  நாட்டுக்காக உயிர் துறந்த தியாகிகள் எங்கே? அவர்களெல்லாம் வேலியைக் காக்க மடிகின்ற பயிர்களாக இருந்தார்கள். இப்போதோ வேலியே பயிரை மேய்கின்ற கதைதான். நாட்டில் ஒரு பக்கம் பிரவினை வாதம். இன்னொரு புறம் தீவிர வாதம். மதம் என்ற பேரால் சமூக ஒற்றுமைக்குப் பங்கம். ஜாதிச் சண்டைகள்.. எங்குப் பார்த்தாலும் ஏதேனும் ஒரு காரணத்தால் கலவரங்கள்.. உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பின்மை, விலைவாசி ஏவுகணை செல்லும் உயரத்தைத் தொட்டு நிற்றல், பாலியல் கொடுமைகள்.. இவற்றையெல்லாம் எண்ணிப்பார்த்த சிவராமனுக்கு உறக்கம் வரவில்லை..
இன்றோ நாளையோ என்று பழம்பாயாகிக் கிடந்தது அவரது காலம்.
பத்திரிகைகளைப் படித்தால் கொலை,கொள்ளை, கற்பழிப்பு.. இது பாரத பூமியா? சிவராமனுக்குக் கல்லூரியில் படிக்கும் மகள் கங்காதான் நாளேட்டை வாசித்துக் காட்டுவாள். செய்திகள் செவியில் ஏறும்போதே அவருக்கு இரத்த அழுத்தமும் ஏறிக் கொண்டே போகும். அந்த அளவுக்கு நாட்டு நடப்புகள்...... துப்பாக்கிச் சூடு, சாராயச் சாவு, பசி பட்டினியால் குடும்பமே தற்கொலை, காண்ட்ராக்ட் ஊழல், நிலபேர ஊழல்.. இப்படிப்பல செய்திகளை அவள் படித்துக்காட்டுவாள். கல்லூரிக்கு ஆயத்தமாக இருக்கும்போது அவளைப் படிக்கச் சொல்லுவதால் அவளுக்கும் ஒரு விதச் சலிப்பு. ஒரு சமயம் கங்காவிடம் சொன்னார்.'' கங்கா! இதோ பாரம்மா, தினம் தினம் பேப்பரைப் படிச்சுக்காட்டறே. நாட்டு விஷயங்களைக் கேட்டாலே காதுலே விஷம் பாயறாப்பிலே இருக்கு.சமூகத்தையும்  நாட்டையும் எத்தனை எத்தனை தினுசான நச்சுக்கொல்லிகள் அரிச்சுக்கிட்டு இருக்கு பார்த்தியா? இதற்காகவா நாம் சுதந்தரம் வாங்கினோம். இதற்காகவா சிறைக்குப் போய் சித்திரவதை செய்யப்பட்டோம்.'' என்று இக்காலத் தலைமுறை செவிக்கொடுத்துக் கேட்பார்கள் என்ற ஒரு நப்பாசையயில் அவளிடத்துப் பேசினார்.
இப்போதெல்லாம் அவரால் தொடர்ந்து பேசவும் முடியவில்லை. ஒரு கால கட்டத்தில் மூன்று மணிநேரம்  பேசியவர் அவர்.
!ஒருமுறை தஞ்சையில் திலகர் திடலில் பேசினாரே.அது மறக்கக்கூடிய பேச்சா?  பசி பட்டினிக் கொடுமைகளால் நாடு நித்திய தரித்திரராய் ஆகிக்கொண்டிருக்கிறதே, இதற்குக் காரணம் யார்? அரசியல் வாதிகளே.! சுதந்திரம் பெற்ற பிறகு நாம் காண்பதென்ன? ஏழை ஏழையாகவே இருக்கிறான். பணக்காரன் மேலும் மேலும் சொத்து சேர்த்துக்கொண்டே செல்கிறானே, எப்படி? ஆட்சியின் பேரால் நடக்கும் அட்டூழியங்கள்.. கட்சிகளுக்குள் எத்துணை நிறமாற்றங்கள்? மரத்துப் போன விசுவாசங்கள்... மரித்துப்போன மனிதநேய உணர்வுகள்... மனிதச் சந்தையில் மலிவாகிப் போனதே மனிதம்... சிவராமன் ஒரு காலத்தில் இப்படிப் பேசியவராயிற்றே அதுதான் அவரது கடைசிப் பேச்சு. அதற்குப் பிறகு எந்தக் கூட்டத்துக்கும் போகமுடியாமல் பக்க வாதம் அவரை வாட்டிவிட்டது.  
கங்காவிற்கும் கனவுகள் நிறைய இருந்தன. தன்னைச்சுற்றிய உலகம் சுருங்கிப் போவதை அவள் விரும்பவில்லை. அப்பாவிற்குப் பணிவிடை செய்வது முதல் நாளேட்டைப் படித்துக் காட்டுவது வரை அவள்தான். ஆனால் சில தினங்களாக அவளிடம் மனமாற்றம் காணப்பட்டது. வீட்டிலே சிறைப்பட்டுக்கிடப்பதாக எண்ணத் தொடங்கிவிட்டாள் கங்கா. தான் இன்னும் தன்னிடமிருந்தே விடுதலை பெறவில்லை என்ற உணர்வுக்கு வந்துவிட்டாள்.  அந்தச் சிந்தனை அவளிடம் தீவிரமாகியது.  
புறச்சூழலால் அவள் எண்ணம் வேறுபடத் தொடங்கியது. அவளிடம் இறகு முளைத்த எண்ணம் புதிய வானத்தை நோக்கிச் சிறகு விரித்தது. கல்லூரியில் தன்னோடு படித்த சஞ்சீவோடு  வீட்டை மறந்து ... தந்தையை மறந்து ... தான் வளர்ந்த சூழலை மறந்து சஞ்சீவோடு பறந்து விட்டது அந்தச் சுதந்திரப் பறவை.
ஒரு நாள் காலை 'பங்க்' கடை ஒன்றில் பத்திரிக்கையில் புகைப்படம் வெளியாகி இருந்ததைப் பார்த்த மாத்திரத்தில் அதிர்ந்து போனாள் கங்கா. அன்றைய நாளேட்டில் பரபரப்பான செய்தி முதல்பக்கத்தில் கொட்டை எழுத்தில் இருந்தது. ''போலீசின் பிடியில் இருந்து தப்பிய தீவிரவாதி''.
அந்த நபர் வேறுயாருமில்லை. தன் அண்ணன் திலீபன்  என்று அறிந்தபோது கலங்கினாள்.
தியாகி சிவராமனின் மகன் அல்லவா அவன்?
படுக்கையில் சிவராமன் இருமிக்கொண்டே இருந்தார். சிவராமன். ஏதோ தொண்டைக் குழியை அடைத்தது போன்று இருந்தது.
இன்னும் விடியவில்லை. சாம்பல் பூத்த வானம் பொல பொல வென்று வர இன்னும் நேரம் இருந்தது. பேப்பர் பையன் எறிந்துவிட்டுப் போன நாளேடு அப்படியே கிடந்தது. அங்கு அவருக்குப் படித்துச்சொல்ல யார் இருந்தார்கள்? வாசற்படியில் பத்திரிக்கை கிடந்தது. அந்தக் கிழவரைப் போல .. அனாதையாக!...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக